Durai Vaiko's banner
Durai Vaiko's profile picture

Durai Vaiko

@duraivaikooffl8,545 subscribers

இந்திய மக்களவை உறுப்பினர்(MP-Lok Sabha) முதன்மைச் செயலாளர்-மறுமலர்ச்சி திமுக

Videos

duraivaikooffl's profile picture

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.05.2026) மதியம் 3:30 மணியளவில், தலைவர் வைகோ அவர்களின் அண்ணா நகர் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து, தலைவரின் வாழ்த்துகளைப் பெற்றார். எங்கள் இல்லம் வரும் முதலமைச்சர் அவர்களை வரவேற்கும் விதமாக வாசல் வரை சென்று அன்புடன் ஆரத்தழுவி வரவேற்று, பட்டாடை அணிவித்து, மலர்மாலை சூட்டி, இல்லத்திற்குள் அழைத்துச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதலமைச்சரை அன்புடன் கட்டி அணைத்து வரவேற்றார். முதல்வரும் தலைவரை உணர்வுபூர்வமாக அணைத்துக்கொண்டே நடந்துவந்தார். பிறகு தலைவர் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, மலர்மாலை சூட்டி, தன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். முதலமைச்சர் அவர்களும் தலைவர் வைகோ அவர்களுக்கு அழகிய பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து போற்றத்தகும் பண்புடன் மரியாதை செலுத்தினார். இச்சந்திப்பின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களையும் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக தோழர்களை அறிமுகப்படுத்தினோம். பிறகு, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்தினோம். அத்துடன், தலைவர் இல்லத்திற்கு முதல்வர் வருகிறார் என்ற செய்தி அறிந்து எங்கள் வீட்டுப் பெண் பணியாளர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒருவகையான தவிப்புடனும் இருந்ததை கவனித்தேன். நானே அவர்களை அழைத்து உங்கள் அனைவரையும் முதல்வரை சந்திக்க வைக்கிறேன் என்று கூறிய போது அவர்களின் முகத்தில் ஆர்வம் படர்ந்தது. சொன்னபடியே அவர்களை முதல்வரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். மிகுந்த உற்சாகத்துடன் அவர்கள் அனைவரும் எமக்கு நன்றி தெரிவித்தனர். இப்படிப்பட்ட பல்வேறு தரப்பு மக்களின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்று சாதி, மத, பணபலம் கடந்து நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளீர்கள். பெரியார் – அண்ணா வழியில் சமூகநீதியையும், சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் உயர்த்திப் பிடித்து, மக்கள் நலன் நிறைந்த நல்லாட்சியை வழங்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் வாழ்த்து கூறினார். அதை நானும் முழு மனதுடன் ஆமோதித்தேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழு ஒத்துழைப்பும், தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், எனது உறுதுணையும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்று உறுதியளித்தேன். முதல்வர் தலைவருடன் உரையாடுகையில், 1983 ஆம் ஆண்டு முதல்வரின் தந்தை திரு. சந்திரசேகர் அவர்களின் இல்ல திறப்பு விழாவிற்கு டாக்டர் கலைஞர் அவர்களுடன் சென்றிருந்ததை நினைவுகூர்ந்தார். அப்போது உங்களுக்கு 9 வயது என்று கூறினார். அதை மகிழ்வோடு நினைவுபடுத்தி வழிமொழிந்தார் முதல்வர். அப்போது புன்னகையுடன், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, விமான நிலையத்தில் நாம் சந்தித்தோம் என்று முதல்வர் கூறியபோது, ஆமாம் அப்போது உங்கள் பண்பாடு மிக்க மரியாதைக்குரிய நடத்தையும், நற்பண்புகளும் என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே உங்களைப் பற்றி பலரிடம் நான் பாராட்டிப் பேசியுள்ளேன் என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். உங்கள் பேச்சுக்கு நான் பெரும் ரசிகன் என்று முதலமைச்சர் உணர்வுபூர்வமாகக் கூறினார். மேலும், சமீபத்தில் விக்கிரவாண்டி செல்லும்போது, உங்கள் பேச்சைத் தான் கேட்டபடியே பயணித்தேன் என்றும் உள்ளம் திறந்து உணர்வுபூர்வமாக தனது எண்ணத்தை பிரதிபலித்தார். 1967 ஆம ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன்முதலில் முதல்வர் பொறுப்பேற்றபோது அனைத்துக்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்ததை நினைவுகூர்ந்த தலைவர் வைகோ அவர்கள், இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும் அதே பெருந்தன்மையுடன் நடந்துகொண்டது அரசியலில் அபூர்வமான ஒன்று. இது ஆக்கபூர்வமான அரசியலுக்கு அழகான முன்னுதாரணம். இது ஒரு நல்ல தொடக்கம் என்று பாராட்டினார். சந்திப்பின் இறுதியில், தலைவர் அவர்களுடன் நானும் முதலமைச்சர் அவர்களை வாகனம் வரை சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தோம். நன்றி தெரிவித்து புறப்பட்டுச்சென்றார். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 11.05.2026 #VijayTvk #cmvijay TVK Vijay #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko

Durai Vaiko

58,097 görüntüleme • 1 ay önce

Daha fazla içerik yok.